மாலியில் உள்ள ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றி வரும், லெப்டினன்ட் கேணல் கலன அமுனுபுர மீதான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எந்த விதமான விசாரணைகளுமின்றி அவரை நாட்டுக்கு திருப்பியனுப்பும் ஐ.நாவின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் ஏற்றுக் கொண்டதன் மூலம், அவரை அனைத்துலக நீதிமன்றில் நிறுத்துவதற்கு அரசாங்கம் வழிவகுத்துக் கொடுத்து விட்டதாக, சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் – நெளும் மாவத்தையில் அமைந்துள்ள அந்தக்கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதய இலங்கை அரசாங்கத்தின் இந்த முடிவு பாரதூரமானது எனவும், தமிழீழ விடுதலை புலிகளுடனான இறுதி போரின் போது கேணல் அமுனுபுர இராணுவத்தின் 58 ஆவது படையணியை வழிநடத்தியிருந்தார் என்றும், வைத்தியசாலைகள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தியதாகவும், சரணடைந்த விடுதலை புலிகளின் உறுப்பினர்களை சித்தரவதை செய்து படுகொலை செய்ததாகவும், இந்தப் படையணியின் மீது அனைத்துலக உண்மைகள் மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யாஸ்மீன் சூகாவின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது எனவும் அவர் விபரித்துள்ளார்.
அத்துடன் ஐ.நா சபை இந்த அறிக்கையை சுட்டிக்காட்டியே கேணல் அமுனுபுரவை திருப்பியழைக்க அரசாங்கத்திடம் கோரியுள்ளது எனவும், இது சிறிலங்கா இராணுவத்துக்கு ஏற்பட்ட பாரிய அழுத்தம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.