விடுதலைப்புலிகளின் விமானத் தளம் கேப்பாப்புலவுக்கு அருகாமையிலேயே இருந்தது. இதன் காரணமாகவே கேப்பாப்புலவில் இலங்கை விமானப்படையின் முகாம் அமைக்க வேண்டி ஏற்பட்டதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற கேப்பாப்புலவு மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பான ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து கூறுகையில்,
பொது மக்கள் கோருகின்ற கேப்பாப்பிலவு காணிகள் பொது மக்களுக்குச் சொந்தமானவை என விமானப்படைக்குத் தெரியாது. வனபரி பாலனத் திணைக்களமே குறித்த காணியை விமானப்படைக்கு வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
2005ஆம் ஆண்டு வழங்கப்பட்ட குறித்த காணி அனுமதிப் பத்திரத்தை பொது மக்கள் புதுப்பிக்காமையே தற்போது ஏற்பட்டுள்ள பெரும் பிரச்சினைக்கு காரணமாகும் எனவும் அறிவித்துள்ளார்.
இது குறித்து ஆராய்வதற்காக இன்றைய தினம் பிரதமருடனான சந்திப்பு ஒன்று நடைபெற உள்ளதாகவும், இதில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுக்கு சரியான தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் விமானதளம் கோப்பாப்புலவு பகுதிக்கு அருகிலேயே அமைந்திருந்தது. இதனால் பாதுகாப்பை கருத்திற் கொண்டே இலங்கை விமானப்படை குறித்த நிலத்தை கைப்பற்றி தற்போது சிவில் போக்குவரத்து தளமாக குறித்த நிலத்தை பயன்படுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் குறித்த பிரச்சினை சுமூகமான முறையில் தீர்த்து வைக்கப்படும் எனவும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன உறுதியளித்துள்ளார்.