சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா பாகிஸ்தானுக்கு திடீர் பயணத்தை மேற்கொண்டு, முக்கிய தலைவர்கள் மற்றும், இராணுவ அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நேற்று முன்தினம் பாகிஸ்தானைச் சென்றடைந்த சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா நேற்று ராவல்பிட்டியில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் குவாமர் ஜாவிட் பஜ்வாவை சந்தித்துப் பேசியுள்ளார்.
இதன்போது பிராந்திய பாதுகாப்பு மற்றும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்துப் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன.
அதேவேளை, பாகிஸ்தான் ஜனாதிபதி ஆரிப் அல்வியையும் சிறிலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இதன்போது, இரண்டு நாடுகளுக்கும் இடையில் பொருளாதார, கலாசார, பாதுகாப்பு உறவுகள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்று, பாகிஸ்தான் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.