தலைமை அமைச்சர் பதவியிலிருந்து தாம் விலகியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராஜபக்ச இன்று சிறப்பு உரை ஒன்றை நிகழ்த்தி அறிவித்துள்ளார்.
புதிய தலைமை அமைசசரை நியமிப்பதற்காக அரச தலைவருக்கு சந்தர்ப்பத்தை வழங்கி, தாம் தலைமை அமைச்சர் பதவியிலிருந்து விலகியதாக மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து மகிந்த அரசாங்கத்தில் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருடன் மகிந்த ராஜபக்ச இன்று சிறப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
கொழும்பு விஜேராம மாவத்தையில் உள்ள மகிந்த ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின்போது தலைமை அமைச்சர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தில் மகிந்த ராஜபக்ச கையொப்பமிட்டதுடன், சமய நிகழ்விலும் கலந்துகொண்டுள்ளார்.
அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சிறப்பு உரையொன்றையும் நிகழ்த்தியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங்க, நிலையான அரசாங்கம் ஒன்று அமைக்கப்படுவதை ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன தடுத்துள்ளதாக மகிந்த ராஜபக்ச கூறியதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நாட்டில் நிலையற்ற தன்மை தொடர்வதை தவிர்க்கும் நோக்கில், புதிய தலைமை அமைச்சர் ஒருவரை நியமிப்பதற்கு சந்தர்ப்பத்தை அரச தலைவருக்கு வழங்கி தாம் பதவி விலகியதாக மகிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார் என்றும் செஹான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.