சிறிலங்காவில் கொரோனாவின் மூன்றாவது அலை ஏற்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரசாங்கமும், சுகாதார அமைச்சும், சுகாதார வழிகாட்டு முறைகளை சரியாக நடைமுறைப்படுத்த தவறினால், மூன்றாவது அலை ஏற்படுவது தவிர்க்க முடியாததாகி விடும் என்று, பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் றோகண தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் பயணக் காட்டுப்பாடுகள், தனிமைப்படுத்தல் தொடர்பான எந்தவிதமான சட்டங்களோ, ஒழுங்கு முறைகளோ இன்னமும் உருவாக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, பொதுமக்கள் வழமை போல போக்குவரத்து செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், நாடு தற்போது ஈஸ்டர் மற்றும் சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு தயாராகி வருகிறது.ஏனைய நாடுகளில் கொரோனா தொற்று தீவிரமடைந்திருப்பதுடன் வைரஸ் புதிய வடிவத்தில் வேகமாக பரவுகிறது.
அந்த நாடுகள் தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றன.
அரசாங்கம் உடனடியாக பயணக் கட்டுப்பாடுகள் போன்ற இறுக்கமான நடைமுறைகளை அறிவிக்காது போனால், ஈஸ்டர் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குப் பின்னர் மூன்றாவது அலை நாட்டில் உருவாகும்.
அரசாங்கம் உடனடியாக கொள்கை ரீதியான முடிவு ஒன்றை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால், மே, ஜூன் மாதங்களில் ஆபத்தான நிலையை நாடு எதிர்கொள்ளும்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.