சிறிலங்காவுக்கு எதிராக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கொண்டு வரப்படும் தீர்மானத்தை தோற்கடிப்பதற்கு முஸ்லிம் நாடுகள் மத்தியில் பாகிஸ்தான் பரப்புரைகளை ஆரம்பித்துள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வட்டாரங்களே இந்த தகவலை வெளியிட்டுள்ளன.
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் நேற்று முன்தினம் சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச்சு நடத்தியிருந்தார்.
இதன்போது சர்வதேச அரங்கில் சிறிலங்காவுக்கு ஆதரவாக செயற்படுவதாக அவர் உறுதிமொழி அளித்திருந்தார் என்றும் கூறப்படுகிறது.
அதேவேளை, பாகிஸ்தான் பிரதமர், இம்ரான் கான் எதிர்வரும் 22ஆம் நாள் கொழும்புக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்று கூறப்படுகிறது.
இரண்டு நாட்கள் பயணமாக கொழும்புக்குச் செல்லும் இம்ரான் கான், சிறிலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, பிரதமர் மகிந்த ராஜபக்ச, வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
ஜெனிவாவில் பேரவைக் கூட்டத்தொடர் ஆரம்பிக்கவுள்ள அதேநாளிலேயே இம்ரான்கானின் பயணம் இடம்பெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.