ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அனுசரணை நாடுகளால் சிறிலங்காவுக்கு எதிராக கொண்டு வரப்படும் தீர்மானம் ஒரு அரசியல் பிரேரணை என்று, வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
“பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முயற்சிகளில் சிறிலங்காவுக்கு உதவ யாரும் முன்வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பொதுநலவாய அமைப்பின் தலைவராக உள்ள பிரித்தானியா, அந்த அமைப்பின் உறுப்பு நாடாக உள்ள சிறிலங்காவுக்கு எதிராக நட்பு ரீதியற்ற வகையில் இந்த பிரேரணையை கொண்டு வருவது துரதிஷ்டவசமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சிறிலங்கா மீது ஒரு தீர்மானத்தை கொண்டு வருவதில் அனுசரணை நாடுகளின் குழு ஆரம்பத்தில் இருந்தே உறுதியாக இருந்தது. அது சரியா தவறா என்று அவர்கள் கவலைப்படவில்லை.
இது ஒரு மோசமான முன்மாதிரி. இன்று இது சிறிலங்காவுக்கு எதிரானதாக இருக்கின்ற போதும், நாளை வேறொரு நாட்டுக்கு இதுபோன்று நடக்கும்.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர், சிறப்பு அறிக்கையாளர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளின் வருகைக்காக, சிறிலங்காவின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்.” என்றும் சிறிலங்கா வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.