போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்கா இராணுவத்தை பாதுகாப்பதற்கான சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப் போவதாக, அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், தெரிவித்துள்ளார்.
“அமெரிக்க காங்கிரஸ் இரண்டு கட்டளைச் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இதற்கமைய அமெரிக்க படையினருக்கு எதிராக ஏதாவது சர்வதேச அமைப்பு அல்லது நாடு விசாரணைகளை நடத்துமெனின், அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு அமெரிக்கா அரசாங்கம், நீதிமன்றங்கள் மற்றும் அமெரிக்க குடிமக்களுக்க முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கப் படைக்கு எதிரான விசாரணைக்கு எவரும் ஒத்துழைப்பு வழங்க முடியாது .அவ்வாறு வழங்கினால் அது பாரதூரமான குற்றமாகும்.
அதேபோல் பிரித்தானியாவிற்குள் அந்நாட்டு படையினருக்கு எதிராக ஏதாவது விசாரணைகளை மேற்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்படுமாயின் அது முற்றுமுழுதாக சட்டவிரோத செயல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நாடுகள் தமது முப்படையினரை காப்பாற்ற இவ்வாறான தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளன.
சிறிலங்காவில் 30 வருட போரை முடிவுக்குக் கொண்டு வந்த இராணுவத்தை தொடர்ந்து தண்டிக்க முயல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இதனால் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவைப் போல் சிறிலங்கா இராணுவத்தை பாதுகாக்க நாடாளுமன்றத்தின் ஊடாக சட்டத்தை உருவாக்குவதற்கு நாம் பின்னிற்கப் போவதில்லை.” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.