முக்கிய செய்திகள்

சிறிலங்கா படையினரின் பாலியல் சித்திரவதைகள் இன்னமும் தொடர்கி்ன்றமை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

617

இலங்கையில் தமிழர்கள் அரச படையினரால் பாலியல் ரீதியிலான சித்திரவதைகளிற்கு உள்ளாவது தொடர்கின்றது என்று மனித உரிமை ஆர்வலர் யஸ்மின் சூக்காவின் அமைப்பான அனைத்துலக உண்மை மற்றும் நீதி திட்டம் தனது புதிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

ஜெனீவாவில் இடம்பெற்றும்வரும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் அமர்வில் அனைத்துலக உண்மை மற்றும் நீதி திட்டம் அமைப்பு இந்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகாலமாக குறிப்பிட்ட அமைப்பினால் சேகரிக்கப்பட்ட வாக்குமூலங்களை அடிப்படையாக வைத்து அனைத்துலக உண்மை மற்றும் நீதி திட்டம் அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட அமைப்பு போரின்போதும் அதன் பின்னரும் தமிழ் மக்கள் சிறிலங்கா படையினரால் பாலியல் ரீதியில் சித்திரவதைகளை அனுபவித்தனர் என்று குறிப்பிட்டுள்ளதுடன், தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரத்திலிருந்து நன்மையடையும் சிறிலங்கா பாதுகாப்பு தரப்பினர், பாலியல் வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

1987 முதல் 1990 வரை இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதிப்படையினரும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் எனவும் இந்தப் புதிய அறிக்கை தெரிவித்துள்ளது.

இலங்கை அரசபிரதிநிதிகள் பல ஆண்டுகளாக இவ்வாறான பிரச்சினையொன்று உள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்து வருவதனால், குற்றவாளிகள் தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரம் தீவிரமடைந்துள்ளது எனவும் அனைத்துலக உண்மை மற்றும் நீதி திட்டம் அமைப்பின் அறிக்கை தெரிவித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இவ்வாறான பாலியல் சித்திரவதைகளில் ஈடுபட்டதாக எவரும் குற்றம்சாட்டவில்லை எனவும், இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களை விடுதலைப்புலிகள் கடுமையாக தண்டித்தனர் என்பதையும் புதிய அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

சிறிலங்கா பாதுகாப்பு தரப்பை சேர்ந்த பல்வேறு பிரிவினர் பாலியல் சித்திரவதைகளில் ஈடுபடுவதாகவும், பயங்கரவாத விசாரணை பிரிவினர், குற்றப்புலனாய்வு பிரிவினர், படைத்தரப்பை சேர்ந்த பலர் இவ்வாறான சித்திரவதைகளில் ஈடுபட்டனர் என்று பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பிட்டுள்ளனர் எனவும் அது விபரித்துள்ளது.

பல்வேறு புனர்வாழ்வு முகாம்கள், இராணுவ முகாம்கள், சிறைச்சாலைகள் மற்றும் புலனாய்வுப் பிரிவினர், பயங்கதரவாத தடுப்பு பிரிவினரின் உத்தியோகபூர்வமற்ற முகாம்கள் போன்றவற்றில இந்த சித்திரவதைகள் இடம்பெற்றுள்ளன எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புடன் நெருங்கிய தொடர்பை கொண்டிராதவர்களை கைதுசெய்யும் அல்லது கடத்தும் போக்கு காணப்படுகின்றது எனவும், உதாரணமாக விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினரின் நெருங்கிய உறவினர்கள் போன்றவர்கள் கடத்தப்பட்டுள்ளனர் எனவும் அனைத்துலக உண்மை மற்றும் நீதி திட்டம் அமைப்பு தனது புதிய அறிக்கையில் தெரிவித்துள்ளது.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *