சுதந்திர தினத்தை தமிழர்கள் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய எழுச்சிப் பேரணிகளை நடத்தவுள்ளதாக வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் பணிப்பாளர் பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில், “பெப்ரவரி நான்காம் திகதி தமிழர்களின் வரலாற்றில் என்றுமே மறக்க முடியாத கரிநாளாகும்.
ஆங்கிலேயர்களின் ஆதிக்கப் பிடியிலிருந்து தம்மை விடுவித்துக்கொண்ட இலங்கைத் தீவு தமிழர்களின் மீது இனவழிப்பைக் கட்டவிழ்த்துவிட்ட நாள். ஈழத் தமிழர்களின் உரிமைகளும், சுதந்திரமும் பறிக்கப்பட்ட நாளாகும்
இனியாவது சிறீலங்காவை விசாரிப்பதற்கு ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உள்ளிட்ட ஐ.நா. உறுப்பு நாடுகள் பாதுகாப்புச் சபைக்குப் பரிந்துரை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் பெப்ரவரி நான்காம் திகதி கரிநாளாகப் பிரகடனப்படுத்தி வடக்கு கிழக்கு தழுவிய மக்கள் எழுச்சிப் பேரணி நடத்த எமது அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதி, வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சியில் காலை 8-30 மணிக்கு கந்தசுவாமி ஆலைய முன்றலில் பேரணி ஆரம்பமாகும். கிழக்கு மாகாணம் சமநேரத்தில், மட்டகளப்பு கல்லடி பாலத்தில் ஆரம்பமாகி காந்தி பூங்காவைச் சென்றடையும்.
இப்பேரணிக்கு அனைவரும் தங்களது ஆதரவை வழங்கி சிங்கள தேசத்தின் சுதந்திர தினத்தைக் கரிநாளாகப் பிரகடனப்படுத்தி சர்வதேச விசாரணைக்கு வலுச்சேர்க்குமாறு அன்புரிமையுடன் வேண்டி நிக்கின்றோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது