சிறிலங்கா அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகிக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும், மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன இராமநாதனுக்கும்ம் இடையிலான முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.
இந்த நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள அரச அதிகாரிகள், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் அங்கஜன் இராமநாதனின் இணைப்பாளர்களால் அச்சுறுத்தப்படுகின்றனர் என்று, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம்சாட்டியுள்ளார்.
நல்லூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற, நிகழ்வில் உரையாற்றிய அவர்,
“யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிகாரிகள், சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவரின் பெயரால், அவரது இணைப்பாளர்கள் எனப்படுவோர் மிரட்டல் விடுப்பதாகவும், அழுத்தம் கொடுப்பதாகவும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறான அநாகரீகமான செயற்பாடுகள் ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவருக்கு தெரிந்து நடக்கிறதா, தெரியாமல் நடக்கிறதா என்பதை அறிய, அவருடன் கலந்துரையாடவுள்ளேன்.
அவருக்குத் தெரியாமல் நடக்குமானால், இவ்வாறான அநாகரிகமான செயலை அவர் கட்டுப்படுத்த வேண்டும்.
அவருக்குத் தெரிந்து தான் அரச அதிகாரிகள் மிரட்டப்படுவார்களானால், அது தொடர்பாக ஜனாதிபதியுடனும், பிரதமருடனும் பேசி முடிவு காணுவேன்.
என்னை மக்களிடம் இருந்து சண்டித்தனத்தினால் பிரித்து விடமுடியாது.” என்றும் அவர் கூறியுள்ளார்.