சிறிலங்காவில் கொரோனா தடுப்பூசி ஏற்றும் செயற்பாடுகள் கடந்த 31ஆம் நாள் தொடக்கம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு, அஸ்ட்ராஜெனெகா (Astrazeneca ) கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை இந்திய அரசாங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாலேயே, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி மருந்துகள் இம்மாத இறுதியில் கிடைக்கும் என்றும், அதன் பின்னர், தடுப்பூசி செலுத்தும் பணி முன்னெடுக்கப்படும் என்றும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
அதேவேளை, முதல் தடவை தடுப்பு மருந்தை செலுத்திக் கொண்டவர்களுக்கு, இரண்டாவது முறை செலுத்துவதற்காக 2 இலட்சத்து 36 ஆயிரம் தடுப்பூசிகள் எஞ்சியிருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அதேவேளை, சீனாவில் இருந்து எடுத்து வரப்பட்ட சினோபார்ம் தடுப்பு மருந்துகளை சீனர்களுக்கு செலுத்தும் நடவடிக்கை திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.