தமிழகத்தின் சேலம் மற்றும் தருமபுரியில் சில இடங்களில் இன்று இலேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பீதியடைந்த பொது மக்கள் உடனடியாக வீதியில் திரண்டனர் என்றும், திடீரென நிகழ்ந்த நில அதிர்வால் நகர்புற மற்றும் கிராம பகுதி மக்களிடையே சிறிது நேரம் அச்சம் நிலவியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
காலை 7.50 மணிக்கு ஏற்பட்ட இந்த நில அதிர்வு சில பகுதிகளில் 3 வினாடியும் பல பகுதிகளில் 5 வினாடிக்கு மேலும் நீடித்ததாகவும், நில அதிர்வு ஏற்பட்ட போது கட்டடங்கள் லேசாக அசைந்ததாகவும், சத்தம் கேட்டதாகவும் பொது மக்கள் தெரிவித்தனர்.
சென்னை ஆய்வு மையத்திலிருந்து பெற்ற தகவல்களை வைத்து, சேலம் மற்றும் தருமபுரியில் 3.3 அளவுக்கு நில அதிர்வு பதிவானதாக அறிவித்துள்ள சேலம் மாவட்ட நிர்வாகம், இதனால் பொது மக்கள் அச்சமடைய வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளது.