அண்மையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்குமாறு சிறிலங்காவிடம் இந்தியா வலியுறுத்தியுள்ளது.
இந்தியா – சிறிலங்கா இடையேயான கூட்டு கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது.
இதில் இந்திய தரப்பில் இருந்து மத்திய மீன் வளத்துறை செயலாளர் ராஜிவ் ரஞ்சன் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர். சிறிலங்கா தரப்பில் மீன் வளத்துறை அமைச்சின் செயலாளர் ரத்நாயக பங்கேற்றார்.
கடந்த காலங்களில் இருநாடுகளுக்கும் இடையே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் மீனவர்கள் விவகாரத்தில் தொடர்ந்து மனித நேயத்துடன் கூடிய அணுகுமுறையை கடைபிடிக்குமாறு இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
அண்மையில் சிறிலங்கா கடற்படை சிறைபிடித்த 40 தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களின் படகுகளை விரைவில் விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
மீனவர்களுக்கு போதுமான தூதரகத்தின் உதவியை அளிப்பதற்கு இந்தியாவுக்கு சிறிலங்கா அனுமதி அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.