சிறிலங்காவில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்றால், இருந்த தமிழ் அரசியல் கைதிகளுக்கு என்ன நடந்தது? என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிறிலங்காவில் அரசியல் கைதிகள் எவரும் இல்லை என்று அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதய கம்மன்பில கூறிய கருத்து தொடர்பாக., நுவரெலியாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
“ அமைச்சர் உதய கம்மன்பிலவின் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விபரங்களை பல தடவைகள் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார். நாமும் அது பற்றி பேசியுள்ளோம்.
நல்லாட்சியின் போது தமிழ் அரசியல் கைதிகள் உள்ளனர் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.
அப்படியானால் இருந்த கைதிகளுக்கு என்ன நடந்தது? அவர்கள் இருக்கின்றனரா அல்லது இல்லாமல் செய்யப்பட்டுள்ளனரா என்ற சந்தேகம் எழுகின்றது என்றும், நாடாளுமன்ற உறுப்பினர். வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.