முல்லைத்தீவு குருந்தூர் மலை மற்றும் படலைக்கல்லு (கல்யாணிபுர) ஆகிய பகுதிகளில் தொல்பொருள் ஆராய்ச்சிகள் முன்னெடுப்பதற்கான பூர்வாங்க செயற்பாடுகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து அங்கு தமிழ் மக்களின் பூர்விக அடையாளங்கள் அழிக்கப்பட்டதாக சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
அத்துடன் தொல்லியல் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் விகாரை அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கும் அபாயமுள்ளதாக சந்தேகங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
தொல்லியல் அகழ்வாராய்ச்சிகளின் போது யாழ் பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த துறைசார்ந்தவர்களையும் இணைத்துக்கொள்ளுமாறு தமிழ் அரசியல், சிவில் பிரதிநிதிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நாளை திங்கட் கிழமை, இராஜங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் தொல்லியல் துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் முக்கிய கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில் தமிழ் தரப்பு துறைசார்ந்தவர்களை குருந்தூர் மலை அகழ்வாராய்ச்சிகளின் போது ஈடுபடுத்துவது தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரியவருகின்றது.