பொருளாதாரக் குற்றங்களில் சிக்கி தலைமறைவாகி இருக்கும் குற்றவாளிகளின் சொத்துகளை முடக்கும் சட்டமூலம் ஒன்று இந்திய மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
நிதி அமைச்சர் பியூஸ் கோயல மக்களவையில் இந்த சட்டமூலத்தை இன்று சமர்ப்பித்து உரையாற்றிய போது, இந்த சட்டமூலம் அவசரச் சட்டமாகப் பிறப்பிக்கப்பட்டு, இப்போது சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படுகிறது என்றும், இதன் மூலம் கறுப்புப் பணத்துக்கு எதிராகவும், இதுபோன்ற குற்றவாளிகளுக்கு எதிராகவும் மத்திய அரசு தீவிரமாக செயல்படுகிறது எனவும் விபரித்துள்ளார்.
இதுபோன்ற சட்டமூலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில் இருக்கும் போது ஏன் கொண்டுவரவில்லை என்றும் கேள்வி எழுப்பிய அவர், இந்த சட்டமூலம் மூலம் அதிகாரிகள் தவறு செய்தவர்களின் சொத்துகளை முடக்குவதோடு, அவர்களின் கையாட்களாக செயல்படுபவர்களின் சொத்துகளையும் முடக்கிவைக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த விவாதத்தின் போது மத்திய அரசு மீது குற்றம்சாட்டிப் பேசிய எதிர்க்கட்சிகள், குற்றவாளிகளைத் தப்பவிட்டு, அக்கறையாக இந்த சட்டமூலத்தை நிறைவேற்றுகிறது என்ற விமர்சனக் கருத்தை முன்வைத்தனர்.
உள்நாட்டில் வங்கிகளில் கடன்பெற்று திருப்பிச் செலுத்தாமல் விஜய் மல்லையா, நிரவ்மோடி, மெகுல் சோக்சி, லலித் மோடி உள்ளிட்டோர் வெளிநாடுகளில் வாழ்கின்றமை மத்தய அரசுக்கு நெருக்குதலை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.