திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகம் இன்று செவ்வாய்கிழமை சென்னையில் நடைபெற்ற கட்சியின் பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவித்துள்ளார்.
முன்னாள் தமிழக முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான கருணாநிதி கடந்த 7ஆம் நாள் மறைந்ததை அடுத்து, கட்சித் தலைவர் பதவிக்கு ஞாயிற்றுக்கிழமையன்று ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.
அவரை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால் ஸ்டாலின் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதன்மூலம் 50 ஆண்டுகளுக்கு பின்னர் கலைஞர் கருணாநிதிக்கு அடுத்ததாக திராவிட முன்னேற்றக கழகத்தின் இரண்டாவது தலைவராக ஸ்டாலின் விளங்குகின்றார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டதற்கு கட்சியின் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகளை பரிமாறியும் கொண்டாடி வருகின்றனர்.
அத்துடன் தமிழகத்தின் இதர பல கட்சிகளின் தலைவர்கள் ஸ்டாலிற்கு தங்களின் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.