திருகோணமலையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 10 பேர் பாதிக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
திருகோணமலை – மட்கோ, மஹாமாயபுர பகுதியில் இன்று பகல் 2 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இரண்டு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாக்கு வாதம் கைகலப்பாக மாறியதாலேயே இந்த வாள் வெட்டு இடம்பெற்றுள்ளதாகவும், குறித்த வாள் வெட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வாளினால் வெட்டியதாக கூறப்படும் 6 பேரும் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் காயமடைந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபர், 39 வயதுடைய பெண் மற்றும் 22 , 17 வயதுடைய மகள் மற்றும் மகன் எனவும் தெரிய வந்துள்ளது.
அத்துடன் வாளால் வெட்டியதாக கூறப்பட்ட மற்றைய குழுவைச் சேர்ந்த 6 பேரும் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் அதில் 52 வயது, 47 வயது, 38 வயது, 27 வயது, 24 வயது மற்றும் 19 வயது உடையவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.