சிறிலங்காவின் 2020 ஆம் ஆண்டின் ‘திருமதி அழகி’ போட்டியில் வெற்றியாளர் புஷ்பிகா டி சில்வாவிடம் இருந்து பறிக்கப்பட்ட கிரீடத்தை மீண்டும் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் திருமதி அழகி போட்டியின் ஏற்பாட்டாளர் சந்திமால் ஜயசிங்க, புஷ்பிகா டி சில்வாவுக்கு வெற்றிக் கிரீடத்தை வழங்கும் நிகழ்வை நாளை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.
போட்டியில் வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட புஷ்பிகா டி சில்வாவுக்கு கீரிடம் அணிவிக்கப்பட்டதன் பின்னர், அவரிடம் இருந்து கிரீடத்தை எடுத்து இரண்டாம் இடம் வந்த போட்டியாளருக்கு அணிவித்ததால் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.
திருமதி உலக அழகி போட்டிக்காக, சிறிலங்காவின் திருமதி அழகியைத் தெரிவு செய்வதற்கான இறுதிப் போட்டி நேற்று இரவு கொழும்பு தாமரைத் தடாக மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதமர் மகிந்த ராஜபக்ஷவின் பாரியார் ஷிராந்தி ராஜபக்ஷ, கொழும்பு மேயர் ரோஸி சேனாநாயக்க ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்துகொண்டிருந்தனர்.
இந்த போட்டியில் நடுவர்கள், எண் 20 இல் போட்டியிட்ட புஷ்பிகா டி சில்வா என்ற பெண்ணை இலங்கையின் திருமதி அழகியாக தெரிவு செய்து அறிவித்தனர்.
2020 ஆம் ஆண்டின் ‘திருமதி உலக அழகியாகத்’ தெரிவு செய்யப்பட்ட கரோலின் ஜூரி, வெற்றிப் பெற்ற புஷ்பிகாவுக்கு கிரீடம் அணிவித்தார்.
இவ்வாறு கிரீடம் அணிவித்து ஒரு சில நிமிடங்களில், ‘திருமதி உலக அழகியாகப் போட்டியிடுபவர்கள் திருமணம் முடித்தவராக இருப்பதுடன், விவாகரத்துப் பெற்றவராக இருக்கக் கூடாது’ என அறிவித்த கரோலின் ஜூரி, புஷ்பிகாவுக்கு அணிவிக்கப்பட்ட கிரீடத்தை நீக்கி, இரண்டாவது இடத்தைப் பெற்ற வெற்றியாளருக்கு அணிவித்துள்ளார். இதனால் கவலையடைந்த புஷ்பிகா டி சில்வா மேடையை விட்டு வெளியேற வும் அங்கு குழப்ப நிலைமை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.