சிறிலங்காவில் கொரோனா தொற்று உறுதியான மேலும் 155 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதனை அடுத்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 86 ஆயிரத்து 194 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 240 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று உறுதியானவர்களில் 2 ஆயிரத்து 864 பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவரும் நிலையில் 507 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, வடக்கு மாகாணத்தில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளது.
அவர்களில் 10 பேர் உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
அவர்களில் 6 பேர் வங்கி ஊழியர் ஒருவருடன் நேரடித் தொடர்புடையவர்கள் என்றும் மேலும் மூன்று பேர் இ.போ.சவின் காரைநகர் சாலை நடத்துனர் ஒருவரின் உறவினர்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் மார்ஷல் பதவியில் உள்ள ஒருவருக்கும் யாழ். சிறைச்சாலை கைதி ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.