முக்கிய செய்திகள்

நடப்பு சம்பியன் ஜெர்மனியின் கனவு சுக்குநூறானது

741

தற்போது நடந்து வரும் உலககோப்பை கால்பந்து லீக் சுற்றில் ஜெர்மனி தென் கொரியாவிடம் 0-2 என்ற கோல்கணக்கில் தோல்வி அடைந்ததன் மூலம் உலககோப்பை தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளது.

நடப்பு சாம்பியன் ஜெர்மனி லீக் சுற்றோடு வெளியேறியது அந்நாட்டு ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. குரூப் F-ல் இடம்பெற்றிருந்த ஜெர்மனி அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிடும் என கால்பந்து உலகில் எதிர்பார்க்கப்பட்டது.

ஜெர்மனியுடன் மெக்சிகோ, சுவீடன், தென் கொரியா ஆகிய அணிகள் F பிரிவில் இடம்பெற்றிருந்தன. ஜெர்மனி தனது முதல் போட்டியில் மெக்சிகோவிடம் 0-1 என்ற கோல் கணக்கில் தோற்றது. இரண்டாவது போட்டியில் சுவீடனை 2-1 என்ற கணக்கில் வெற்றி கொண்டது. இந்நிலையில் மூன்றாவது போட்டியில் இன்று தென் கொரியாவை எதிர்கொண்டது.

நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடங்களில் இரண்டு அணிகளும் ஒரு கோல் கூட அடிக்கவில்லை. ஆனால் இஞ்சுரி டைம் என கூடுதலாக கொடுக்கப்பட்ட ஆறு நிமிட நேரத்தில் 94-வது நிமிடத்தில் கிம் யங்-வான் கோல் அடித்தார். ஜெர்மனி அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் சன் ஹியூங் மின் இன்னொரு கோல் அடித்தார். ஆட்டம் 100 நிமிடங்கள் வரை நீட்டிக்கப்பட்டிருந்தபோதிலும் ஜெர்மனியால் எதுவும் செய்யமுடியவில்லை.

ஜெர்மனி 1938-க்கு பிறகு அதாவது 80 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக தான் விளையாடும் முதல் சுற்றோடு வெளியேறியது.

F பிரிவில் இருந்து சுவீடன் மற்றும் மெக்சிகோ அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன. தென் கொரியா ஜெர்மனியுடன் வென்ற போதிலும் மூன்று புள்ளிகள் மட்டுமே பெற்றிருப்பதால் அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை. ஜெர்மனி அடுத்த சுற்றுக்கு முன்னேறவில்லை என்பதோடு லீக் சுற்றிலும் கடைசி இடத்தைப் பிடித்துள்ளது.

கடைசி ஐந்து உலக கோப்பை கால்பந்துப் போட்டிகளில் நான்குமுறை அப்போதைய நடப்பு சாம்பியனாக இருந்த பிரான்ஸ் (2002), இத்தாலி (2010), ஸ்பெயின் (2014), ஜெர்மனி (2018) ஆகிய அணிகள் லீக் சுற்றோடு வெளியேறியுள்ளன.




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *