நல்லாட்சி அரசாங்கம் எனக் கூறிக்கொள்ளும் சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பளித்து வருகின்றனர் என்று சிவில் அமைப்புக்கள் குற்றம் சுமத்தியுள்ளன .
நேற்றைய நாள் மருதானையில் இடம்பெற்ற சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளின் சிறப்பு ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சிவில் அமைப்புக்கள் சார்பில் இந்த குற்றச்சாட்டை முன்வைத்த புரவெசி பலய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காமினி உயங்கொட, இதனையே முன்னாள் சனாதிபதி மகிந்த ராஜபக்சவும் செய்திருந்தார் என்பதையும் சுட்டிக்காட்டியள்ளார்.
மகிந்த ராஜபக்ச ஆட்சியில் சுயாதீன அமைப்புகளில் முழுமையான அரசியல் தலையீட்டை ஏற்படுத்தி, நாட்டின் சுயாதீனத்தை முழுமையாக சீரழித்தார் எனவும், இராணுவ அதிகாரிகளை பாதுகாக்கும் செயற்பாடுகளையே அவர் மேற்கொண்டிருந்தார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையி்ல் ஆட்சி மாற்றத்தின் பின்னரும் அதே பாணியில் தான் தற்போதைய சனாதியும் பயணித்துக் கொண்டிருக்கிறார் என்றும் விமர்சனம் வெளியிட்டுள்ளார்.
நல்லாட்சியை ஏற்படுத்துவோம் என்ற அவர்களது வாக்குறுதியை நம்பி வாக்களித்த மக்கள் ஏமாற்றப்படுவதான உணர்வு தற்போது எழுந்துள்ளது எனவும் காமினி உயங்கொட குறிப்பிட்டுள்ளார்.