சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி நாட்டுப்பற்றாளராக தமிழீழ விடுதலைப் புலிகளால் மதிப்பளிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை (அன்றைய தினம்) வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
சிறிலங்கா அரசாங்கம் தமிழினத்தின் மீது நடத்தி வரும் இன அழிப்பு நடவடிக்கையில் அது மேற்கொண்டு வரும் கருத்து ஆக்கிரமிப்பை உடைக்கும் தமிழ்த் தேசிய ஊடகப் பணியில் தாயகத்தில் இருந்து திறம்பட செயற்பட்டவர் நாட்டுப்பற்றாளர் பு.சத்தியமூர்த்தி.
தாயகத்தின் ஊடகங்களில் தனது தமிழ்த் தேசிய ஊடகப்பணியை தொடக்கிய பு.சத்தியமூர்த்தி புலம்பெயர் தளத்தில் வாழ்ந்து வரும் மக்களிடம் தமிழ்த் தேசியக் கருத்தை வளர்த்தெடுக்கும் ஊடகப்பணியை தாயகத்தில் இருந்து செய்து வந்தார். புலம்பெயர் தளத்தில் விடுதலைப் போராட்டம் பற்றியும் தமிழ்த் தேசியக் கருத்தையும் தனது ஊடகப்பணி ஊடாக பு.சத்தியமூர்த்தி செய்து வந்தார்.
தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தனது ஊடகப்பணியை நெருக்கடிகள் இடம்பெயர்வுகள் அவலங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து மேற்கொண்டு வந்த அவரின் உயிரை சிங்களப் பேரினவாதம் பறித்துள்ளது.தமிழ்த் தேசிய ஊடகப்பணியை திறம்படச் செய்து வந்த பு.சத்தியமூர்த்தி தமிழீழ விடுதலைப் புலிகளால் நாட்டுப்பற்றாளராக மதிப்பளிக்கப்பட்டுள்ளார் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.