தமிழக சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாம் தமிழர் கட்சி எனும் அரசியல் பேரியக்கம் கடந்த 11 ஆண்டு காலத்தில் ஏற்படுத்திய தாக்கமும், அதிர்வுகளும் அபரிமிதமானது. அசாதாரணமானது.
தற்போது தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் இரு பெரும் திராவிடக் கட்சிகளான அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் பணத்தை வாரியிறைத்து அதிகாரத்தைப் பயன்படுத்தி வாக்குகளை வேட்டையாடும் சதிச்செயலை அரங்கேற்ற அணியமாகி நிற்கின்றன.
இந்நிலையில் எதிர்வரும் 7ஆம் திகதி மதியம் 3 மணிக்கு சென்னை ராயப்பேட்டை வை.எம்.சி.ஏ. திடலில் தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகம் செய்வித்து, நாம் தமிழர் கட்சியின் ஆட்சியின் செயற்பாட்டு வரைவை ஆவணமாக வெளியிட இருக்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.