யாழ். பல்கலைக்கழகத்தில் அமைந்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, நாளை நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் ஆதரவு தருமாறு அழைப்பு விடுத்துள்ளனர்.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திங்கட்கிழமை வடக்கு, கிழக்கில் நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு, வடக்கு, கிழக்கில் உள்ள அனைத்து மக்களும் பூரண ஆதரவினை வழங்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் சிறுபான்மை மக்களுக்கு எதிராக செய்கின்ற அநீதிகளுக்கு ஒருமித்த குரலாக எதிர்ப்பினை வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், முள்ளிவாய்க்கால் நினைவு சின்னம் உடைக்கப்பட்டதையும் வன்மையாக கண்டித்துள்ளார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களாக சாணக்கியன் மற்றும் கோவிந்தன் கருணாகரன் ஆகியோரும், பல்கலைக்கழத்தில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி அழிக்கப்பட்டதைக் கண்டித்து அறிக்கைகளை வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், நாளை நடைபெறவுள்ள முழு அடைப்பு போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.