நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தி ஜனநாயக ரீதியாக முன்னெடுக்கப்படும் போராட்டத்தை தடுக்க பொலிசார் முற்படுகின்றனர் என்று, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் சிவயோகநாதன் குற்றம்சாட்டியுள்ளார்.
சிறிலங்காவை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரி, மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய முன்றிலில் முன்னெடுக்கப்படும் சூழற்சி முறையிலான உணவுதவிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளவர்களுக்கு சிறிலங்கா காவல்துயினர் நேற்று மாலை தடையுத்தரவுகளை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
போராட்டம் நடைபெறும் இடத்திற்குச் சென்ற காவல்துறையினர் தடையுத்தரவுகளில் உள்ள பெயர்களை குறிப்பிட்ட போது, அவர்கள் யாரும் அங்கு இல்லாத காரணத்தினால் அங்கிருந்தவர்களின் பெயர்களைப் பதிவு செய்து கொண்டு சென்றுள்ளனர்.
மட்டக்களப்பு தலைமையக காவல் நிலையம் ஊடாக இந்தத் தடையுத்தரவுகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் சிவயோகநாதன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்திற்கு சர்வதேச ரீதியில் சங்கடத்தினை ஏற்படுத்துவதாகவும் போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றும், குறிப்பிட்டு, குறித்த பகுதியில் போராட்டம் நடத்தக் கூடாது என்று சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்ததாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.