நெடுவாசலில் கைவிடப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டம், தற்போது தமிழகத்துக்கு மீண்டும் வரவுள்ளது என்று வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்காக நில ஆய்வு மேற்கொள்ளப்படாத இடங்களிலும், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை, கடந்த ஜனவரி மாதம் ஒப்பந்தம் கோரியிருக்கிறது.
இந்த ஒப்பந்தத்தை எடுத்த நிறுவனங்கள், அங்கு புதிதாக நில ஆய்வு நடத்தி, அதன் பின்னர் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்டவற்றை எடுக்கும் எனக் கூறப்படுகிறது.
ஓ.ஏ.எல்.பி எனப்படும் ஒப்பந்தங்கள், நெடுவாசலைக் காட்டிலும் பல மடங்கு பெரிய நிலங்களைக் கொண்டதாகும் என்பதுன், இதில், தமிழகத்தில் 3 இடங்கள் உட்பட நாடு முழுவதும் 41 இடங்களுக்கான ஒப்பந்தங்கள் (மொத்தம் 55 ஒப்பந்தங்கள்) வேதாந்தா நிறுவனத்துக்கு கிடைத்துள்ளன.
அவற்றில் இரண்டு இடங்கள் தமிழகத்தின் காவிரி டெல்டா பகுதிகளில் அமைந்துள்ளன என்பதுடன், இதே டெல்டா பகுதியில் அமைந்த மற்றொரு இடத்துக்கான ஒப்பந்தத்தை, ஓ.என்.ஜி.சி நிறுவனம் எடுத்துள்ளது.
தமிழகம் உட்பட எங்களுக்கு கிடைத்துள்ள 41 இடங்களிலும் இதுவரை நில ஆய்வு நடந்ததில்லை எனவும், செயற்கைக் கோள்கள் மூலமாக மேற்கொள்ளப்படும் மண்ணியல் ஆய்வில் அங்கு இயற்கை வளங்கள் இருப்பது தெரியவந்துள்ளது என்றும், இதுகுறித்து ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்ட வேதாந்தா நிறுவனத்தின் செய்தித் தொடர்பு அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்,
இங்கு நில ஆய்வு செய்வதற்கு 3 முதல் 5 ஆண்டுகள் ஆகும் எனவும், இதற்கான ஒப்பந்தங்களை ஜெர்மனி, அமெரிக்க நிறுவனங்களிடம் வழங்கியுள்ளதாகவும், நில ஆய்வின் முடிவில் கண்டறியப்படும் இடங்களில், எண்ணெய் மற்றும் எரிவாயு பொருட்களை 30 ஆண்டுகளுக்கு எடுப்போம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.