கொக்குவில் பகுதியில் கடந்த வியாழக்கிழமை இரவு காவல்த்துறையினரின் துப்பாக்கிப் பிரயோத்தின் காரணமாக கொல்லப்பட்ட பல்கலைக்கழக ஊடகத்துறை மூன்றாம் ஆண்டு மாணவன் விஜயகுமார் சுலக்சனின் பூதவுடல் இன்று மாலை உடுவில் பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இறுதி வணக்க நிகழ்வில் மாணவனின் பூதவுடலுக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பெரும் திரளான மக்கள் இறுதிவணக்கம் செலுத்தினர்.
பின்னர் மாணவனின் பூதவுடன் அவரது இல்லத்திலிருந்து காங்கேசன்துறை வீதியில் சுண்ணாகம் மருதனார்மடம் ஊடாக உடுவில் மல்வம் பொது மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நீதிமன்ற உத்தரவிற்கமைவாக நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதேவேளை பல்கலைக்கழக மாணவாகள் இருவர் சிறிலஙகா காவல்த்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு நீதி கோரி வடக்கிலும் கிழக்கிலும், கொழும்பிலும், கண்டி பேராதனையிலும் பல்கலைகழக மாணவா சமூகத்தினரால் இன்று போராட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் அரசு செயலகம், வடமாகாண ஆளுனர் அலுவலகம் ஆகியவற்றை முற்றுகையிட்டும், ஏ9 நெடுஞ்சாலையை மறித்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று போராட்டம் நடாத்தியிருந்தனர்.
கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டமும், வவுனியாவில் விரிவுரைகளைப் பறக்கணித்த போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது.
அவ்வாறே கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமுலை வளாகத்திற்கு முன்பாகவும், சுவாமி விபுலானந்தர் அழகியல் கற்கை நிறுவனங்களுக்கு முன்பாகவும் மாணவர்கள் ஒன்றுகூடி ஆர்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்பாட்டம் ஒலுவில் வளாகத்திற்கு முன்பாக நடைபெற்றது.
யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்களின் இந்த கொலையைக் கண்டித்து கொழும்பில் சிறி ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்களும் இன்று காலை தமது பல்கலைக்கழகத்திற்கு முன்பாக போராட்டம் நடாத்தியுள்ளனர்.
இந்த போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள மற்றும் பௌத்த மத குருமார் என பலர் கலந்து கொண்டதுடன், இதன் காரணமாக பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இன்று இடம்பெறவில்லை.
இதனை விட முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய இடங்களில் பாடசாலை மாணவர்களாலும், பழைய மாணவா சங்கத்தினாலும் ஆங்காங்கே போராட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன.
இதேவேளை பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டதைக் கண்டித்து வடக்கில் நாளை முழு அடைப்பிற்கான அழைப்பை வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் விடுத்துள்ளன என்பதுடன், அதற்கு யாழ்ப்பாணம், மற்றும் வவுனியா வர்த்தக சங்கங்களும் ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.