பாதுகாப்பு மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, தொற்றாளர்களுடன் தொடர்புடைய அமைச்சின் அதிகாரிகள் பலரையும் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு மூடப்படவில்லை என்றும், அமைச்சு மற்றும் சுற்றுப்புறங்களை தொற்றுநீக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும், தகவல் திணைக்களம் மேலும் கூறியுள்ளது.
அத்துடன், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு தொடர்ந்து வழமைபோல இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, உச்சநீதிமன்றத்தின் நான்கு பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இன்று காலை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
உச்சநீதிமன்ற பணியாளர்கள் 100 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளின் போதே, நான்கு பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, சில நாட்களுக்கு முன்னதாக சுகாதார அமைச்சில் 08 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்ததுடன், அவர்களுடன் தொடர்புடைய 74 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.