முன்னாள் தூதுவரும் மகிந்த ராஜபக்சவின் மைத்துனருமான, உதயங்க வீரதுங்க, அலரி மாளிகையை தனது முகவரியாக, கொடுத்திருப்பது குறித்து சிறிலங்கா நாடாளுமன்றத்தில் இன்று கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
சிறிலங்கா பிரதமரின் அதிகாரபூர்வ வதிவிடமான அலரி மாளிகையை உதயங்க வீரதுங்க தனது முகவரியாக கொடுத்துள்ளார் என்றும், அவர் அதனை தனது வதிவிடமாக பயன்படுத்துவதற்கு உரிமை உள்ளதா என்றும், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி கேள்வி இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார்.
ஏனைய தூதுவர்களும், அலரி மாளிகையை தமது வதிவிடமாக பயன்படுத்த முடியுமா என்றும் அவர் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தனவிடம் கேட்டார்.
அமெரிக்காவுக்கான தூதுவர் ரவிநாத ஆசிரியசிங்க தொடர்பான கேள்வியே பட்டியலிடப்பட்டுள்ளதாக கூறி, அதற்கு பதிலளிக்க அமைச்சர் தினேஸ் குணவர்த்தன மறுப்புத் தெரிவித்தார்.
இதையடுத்து, நாட்டின் வளங்கள் அரசாங்கத்தின் நண்பர்களாலும் குடும்பத்தினராலும் தவறாக பயன்படுத்தப்படுவது தற்போது தெளிவாகியுள்ளது என்று சமிந்த விஜேசிறி குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷ வித்தானகே, பிரதமரின் அதிகாரபூர்வ வதிவிடத்தைப் பயன்படுத்த யாருக்கும் உரிமையில்லை என்று தெரிவித்துள்ளார்.