தாயக உறவுகளுக்கு நீதி வேண்டி இரண்டுவாரங்கள் கடந்தும் அறப்போர் நடத்திவரும் அம்பிகை செல்வகுமாரின் உடல்நிலைமை மோசமடைந்துள்ள நிலையில், பிரித்தானிய அரசாங்கம் தொடர்ந்தும் மௌனமாக இருப்பது வேதனையளிப்பதாக தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் செயலாளர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், “சிறிலங்கா தொடர்பாக பிரித்தானிய அரசாங்கம் தலைமையில் கொண்டுவரப்பட்டுள்ள பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தல் எனும் தலைப்பிலான பிரேரணையில், தமிழனத்திற்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்கு சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தல் உள்ளிட்ட நான்கு அம்சக்கோரிக்கைகளை முன்வைத்து பிரித்தானியாவில் அம்பிகை செல்வகுமார் கடந்த 15 நாட்களாக அஹிம்சை வழியில் போராட்டத்தினை நடத்தி வருகின்றார்.
இவருடைய போராட்டத்தினை வலுப்படுத்தும் முகமாகவும் அவருடைய நான்கு அம்சக் கோரிக்கைகளுக்கு மேலும் ஆதரவளித்தும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் அனைத்து பகுதிகளிலும், புலம்பெயர் தேசங்களிலும் தொடர்ச்சியான உண்ணாவிரதப் போராட்டங்கள், கவனயீர்ப்புப் போராட்டங்கள் தொடர்ந்துகொண்டே உள்ளன.
தமிழ் மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதிகோரி தன்னெழுச்சியாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றபோதும் அரசாங்கமும் சர்வதேசமும் அமைதியாகவே இருக்கின்றமை துரதிஷ்டவமானது.
விசேடமாக அம்பிகை செல்வகுமார், உலகிற்கு ஜனநாயக விழுமியக் கற்பிதங்களை வழங்கும் பிரித்தானியாவில் தனது அறப்போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றார். தற்போது வரையில் ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்களே தற்துணிவின் அடிப்படையில் ஆதரவுக் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
ஆனால், பிரித்தானிய அரசாங்கம் தொடர்ச்சியாக மௌனித்த நிலையிலேயே இருக்கின்றது. இவ்விதமான நிலையில் பிரித்தானிய அரசாங்கம் இருப்பதானது அதிர்ச்சியையும் வேதனையும் அளிப்பதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.