மாகாண சபைத் தேர்தலுக்கு முன்னர் புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கு அரசு முடிந்தளவு முயற்சிக்கும் என்று இலங்கையின் அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
நாடு சுதந்திரமாக முன்னேறிச் செல்வதற்குப் புதிய அரசமைப்பு அவசியமாகும் எனவும், புதிய அரசமைப்பு இல்லாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் இல்லை என்றும், மாகாண சபைகளுக்கான தேர்தலை உரிய நேரத்தில் நடத்துவது அவசியமானது என்ற போதிலும், இந்தத் தேர்தலுக்கு முன்னர் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட்டு மாகாண சபைகளின் ஆட்சியதிகாரங்கள் அர்த்தமுள்ளதாக்கப்படவேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கடந்த 6ஆம் நாள் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்தார்.
இந்தக் கருத்தை மேற்கோள்காட்டி அது தொடர்பில் அரசின் நிலைப்பாடு என்னவென்று அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ராஜித சேனாரட்ன, இது சம்பந்தனால் விடுக்கப்பட்ட கோரிக்கை எனவும், அதை நிறைவேற்றுவதற்கு தம்மால் முடிந்தளவு முயற்சிப்போம் என்றும் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனை பதவியிலிருந்து நீக்கமுடி யாது என்று முன்னாள் நீதியரசர் சரத் என் சில்வா கருத்து வெளியிட்டுள்ளமை தொடர்பில் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், விஜயகலாவின் உரை தொடர்பில் சபாநாயகர், சட்டமா அதிபரிடம் அறிக்கை கோரியுள்ளார் எனவும், அந்த அறிக்கை கிடைத்ததும் சட்டமா அதிபரின் பரிந்துரையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.