உலகமெங்கும் முக்கியமான பெரு நிறுவனங்களில் இருபது இலட்சம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஊடுருவியுள்ளதாக அவுஸ்ரேலியாவில் இருந்து வெளியாகும் ‘த அவுஸ்ரேலியன்’ செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
உலகத்தின் மிகப் பெரும் தயாரிப்பு நிறுவனங்கள், வங்கிகள், ஊடக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் அரச நிறுவனங்களில் சுமார் இருபது இலட்சம் சீன கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் இரகசியமாகப் பணிபுரிந்து வருகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக இத்தகைய மேற்கத்திய நிறுவனங்களில் 79ஆயிரம் சீன கம்யூனிஸ்ட் கட்சிக் கிளைகள் செயற்பட்டு வருவதும், இதன் உறுப்பினர்கள் அனைவரும் சீன ஜனாதிபதியான ஷி ஜின் பிங்கிற்கு நேரடியாக பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.