தமிழர்களுக்கு பொதுசன வாக்கெடுப்பு தேவையென ஐ.நா., அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவிற்குச் சொல்ல இதுவே சிறந்த தருணம் என வவுனியாவில் போராட்டம் முன்னெடுத்துவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், இந்தத் தருணத்தை நாம் தவறவிட்டால், வேறு சந்தர்ப்பங்கள் கிடைக்காது என இன்று இடம்பெற் ஊடக சந்திப்பில் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்துடன், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த எம்மை 2017 ஜனவரி 26, அன்று, அன்றைய பாதுகாப்புச் செயலாளர் ருவான் விஜயவர்த்தன பார்வையிட்டு 14 நாட்களுக்குள் தீர்வு வழங்கும் நிமித்தம் அலரி மாளிகையில் எங்களுடன் சந்திப்பொன்றை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.
அந்த சந்திப்பு 2017, பெப்ரவரி 09 அன்று அலரி மாளிகையில் நடைபெற்றது. சுமந்திரனின் பங்கேற்புக் காரணமாக அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. ஆனால், இது திட்டமிட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட தந்திரமாகவே நாம் பார்த்திருந்தோம்.
அந்தவகையில், சாகும்வரை உண்ணாவிரதத்தை நிறுத்தி அலரிமாளிகைக்கு அழைத்து எங்களை ஏமாற்றி இன்றுடன் நான்கு ஆண்டுகள் ஆகின்றன.
கடந்த தேர்தலில், இரண்டு முக்கிய தமிழ் கட்சிகள் பொதுசன வாக்கெடுப்புக்கு உறுதியளித்தன. ஆனால், இந்தக் கட்சிகளால் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கு அனுப்பப்பட்ட, பரிந்துரைக்கப்பட்ட ஐ.நா தீர்மானத்தில் பொதுசன வாக்கெடுப்பை சேர்க்கத் தவறிவிட்டன. நமக்கு என்ன தேவை என்று கேட்க வேண்டுமே தவிர நாம் மற்றவர்களுக்கு செவிசாய்க்கக்கூடாது.
தமிழ் அரசியல் கட்சிகள் தங்கள் கோரிக்கையில் வாக்கெடுப்பு என்ற விடயத்தைச் சேர்க்க மறுத்துவிட்டன என்பது ஒரு மர்மமாகும்.
தமிழர்கள் தாங்கள் அடிமை வர்க்கம் என்று நினைத்திருக்கும் வரை இலங்கையில் எதுவும் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்காது மேலும் என்று குறிப்பிட்டுள்ளனர்.