பொத்துவிலிலிருந்து பொலிகண்டி வரையிலான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி நாடாளுமன்றில் உரையாற்றியுள்ளார்.
உயிர் தப்பியுள்ளோரும், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களும் மேற்கொள்ளும் போராட்டத்தில் குடிசார் சமூக செயற்பாட்டாளர்களும், அரசியல் தலைவர்களும் இணைந்துகொண்டுள்ளார்கள்.
சிறிலங்கா அரசு தமிழர்களுக்கு எதிராகப் புரிந்த போர்க் குற்றங்கள், மனித இனத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை என்பவற்றுக்கான பொறுப்புக்கூறலே அவர்களது நோக்கமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்காத் தீவு சுதந்திரமடைந்த காலத்தில் இருந்து குற்றம்புரிவோர் தண்டிக்கப்படாத நிலை காணப்படுவதுடன் சட்டத்தின் ஆட்சியும் செயலிழந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்கா அரசு கடந்த சில மாதங்களில் மட்டும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை இடித்தழித்து, போர்க் குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கி, முஸ்லிம் சிறுபான்மையினரின் உடல்களைப் பலவந்தமாகத் தகனம் செய்ததுடன் குடிசார் அமைப்புக்கள் பலவற்றை இராணுவம் பொறுப்பேற்றும் உள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திடம் பாரப்படுத்தவேண்டுமெனக் கடந்த வாரம் முடிவு செய்த மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர் ஆணையாளர் சிறிலங்கா தொடர்ந்தும் கட்டுப்பாடுகள் இன்றிச் செயற்பட அனுமதிக்கப்பட்டால் முன்னரைப்போன்ற அட்டூழியங்கள் மீண்டும் இடம்பெறுமென எச்சரித்துள்ளார் என்பதையும் அவர் குறிப்பிட்டுக்காட்டினார். ஆகையால், சிறிலங்காத் தீவில் தமிழர்கள் சமாதானம், நீதி, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றுடன் வாழ்வதை உறுதி செய்வதற்குச் சர்வதேச சமூகம் அவசரமாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்