சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்தக் கோரி, மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்பாக, சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருபவர்களை சிறிலங்கா காவல்துறையினர் இன்றும் அச்சுறுத்தியுள்ளனர்.
உணவு தவிர்ப்பு போராட்டம் நடந்து வரும் இடத்துக்கு உந்துருளியில் சென்ற சிறிலங்கா காவல்துறையினர், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அச்சுறுத்தி அவர்களின் பெயர் விபரங்களை பதிவு செய்து கொண்டு சென்றுள்ளனர்.
இந்தப் போராட்டத்தை நிறுத்தச் செய்யும் வகையில் சிறிலங்கா காவல்துறையினர் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களை விடுத்து வருகின்றனர் என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, உணவு தவிர்ப்பு போராட்டம் இடம்பெற்று வந்த கொட்டகையை, சிறிலங்கா காவல்துறையினர் இரவோடு இரவாக அகற்றியிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, யாழ்ப்பாணம், நல்லை ஆதீனம் முன்பாக இன்று 16 அவது நாளாகவும் இதே கோரிக்கையை வலியுறுத்தி உணவுதவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பல்கலைக்கழக மாணவர்களுடன். அரசியல் பிரமுகர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் என பலரும் இந்தப் போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.