சிறிலங்கா தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் புதிய அறிக்கையையும் பிரித்தானியா பரிசீலிக்கும் என ஜெனீவாவில் உள்ள பிரித்தானியாவின் ஐ.நாவின் நிரந்தர பிரதிநிதி ஜூலியன் பிரத்வைட் (julian Braithwaite), கூறியுள்ளார்.
மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட் (michelle bachelet) சமர்ப்பிக்கவிருக்கும் 16 பக்கங்கள் கொண்ட முழுமையான அறிக்கை வெளியான நிலையில் அது குறித்து கீச்சகப்பக்கத்தில் கருத்துவெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அதில்” சிறிலங்கா தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் மிக முக்கியமான புதிய அறிக்கை குறித்து நாம் அவதானம் செலுத்தியிருக்கிறோம்.
எதிர்வரும் ஜெனிவா கூட்டத்தொடரின் போது சிறிலங்கா வில் மனித உரிமைகளையும் பொறுப்புக்கூறலையும் உறுதிப்படுத்துவதை முன்னிறுத்தி பிரித்தானியா ஆதரவு வழங்கும்” என பதிவிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்கா தொடர்பாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் (michelle bachelet) புதிய அறிக்கையில் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் அமுல்படுத்துவதற்கு சிறிலங்கா தவறும் பட்சத்தில், மாற்று யோசனைகளை நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பதாக ஏற்கனவே பிரித்தானியாவின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.