இலங்கையில் மரணதண்டனையை மீண்டும் நடைமுறைபடுத்தினால், இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள ஜீ.எஸ்.பி சலுகைகளை இழக்க நேரிடும் என்று ஐரோப்பிய சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐரோப்பிய சங்கத்தின் இராஜதந்திர ஆதாரங்களை மேற்கோள்காட்டி பிரஞ்சு செய்தி நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மரணதண்டனையை செயற்படுத்துவதை நிறுத்தக் கோரி ஐரோப்பிய சங்கமும் பிரித்தானிய, பிரான்ஸ், ஜேர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ருமேனியா, கனடா ஆகிய நாடுகள் இல்ஙகை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் அனுப்பியிருந்தன.
ஜீ.எஸ்.பி சலுகைகள், மனித உரிமைகள் மற்றும் அனைத்துலக சட்டவரைபுகளுக்கு ஏற்ப அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளுக்கு ஐரோப்பிய சங்கம் கொடுக்கும் வரி சலுகை என்பது குறிப்பிடத்தக்கது.
மனித உரிமைகள் மீறல் மற்றும் பல குற்றச்சாட்டுக்களினால் 2010 ஆம் ஆண்டு இலங்கைக்கு ஜீ.எஸ்.பி சலுகைகள் இடைநிறுத்தப்பட்ட போதிலும், புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், அந்த சலுகைகள் மீண்டும் கடந்த மே மாதம் வழங்கப்பட்டுள்ளது.
ஜீ.எஸ்.பி பிளஸ் வரி சலுகைகளினால் ஆண்டுதோறும் இலங்கைக்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகை கிடைக்கப்பெறுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.