மலேசியாவுடனான தூதரக உறவை துண்டித்துக் கொள்வதாக வடகொரியா அறிவித்துள்ளது.
தனது பிரஜை ஒருவர் மலேசியாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டதை அடுத்தே, வட கொரியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இது ஒரு இழிவான, மன்னிக்க முடியாத செயற்பாடு என வடகொரிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
பத்தாண்டுகளுக்கும் மேலாக மலேசியாவில் வசித்து வந்த வடகொரிய நாட்டவர், பண மோசடியில் ஈடுபட்டதாகவும், வட கொரியாவுக்கு கப்பல் மூலம் சட்ட விரோதமாக பொருட்களை அனுப்ப போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டி இருந்தது.
வடகொரிய நாட்டவரை 2019ஆம் ஆண்டு மலேசிய காவல்துறை கைது செய்திருந்த நிலையில், அவரை தமது நாட்டுக்கு அனுப்புமாறு அமெரிக்கா கேட்டிருந்தது.
மலேசிய நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில், மார்ச் 9ஆம் திகதி வெளியான தீர்ப்பின் அடிப்படையில் அவர் நாடு கடத்தப்பட்டதாகத் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்தே மலேசியாவுடனான உறவுகளைத் துண்டித்துள்ள வடகொரியா, அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சட்டங்களுக்கு எதிரான அமெரிக்காவின் செயற்பாடுகளுக்கு தமது குடிமகன் பலிகொடுக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளது.