மாகாணசபைத் தேர்தல்கள் விடயத்தில் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவெடுக்கும் நடைமுறைகளில் தலையீடு செய்யும் எண்ணம் இந்தியாவுக்குக் கிடையாது என்று, கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மாகாண சபைகளை ஒழிக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சிகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தடுத்து நிறுத்த வேண்டும் என்று திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் ரிஆர் பாலு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதுதொடர்பாக, இந்திய அரசாங்கம் சிறிலங்காவுடன் கலந்துரையாடியுள்ளதா அல்லது பரிந்துரைத்துள்ளதா என கொழும்பு ஊடகம் ஒன்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகத்திடம், கேள்வி எழுப்பியுள்ளது.
அதற்கு இது சிறிலங்காவின் உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பான விடயம் எனக் குறிப்பிட்டுள்ள இந்திய தூதரகத்தின் நம்பகமான வட்டாரம், இதுபோன்ற விடயங்களில் தலையிடும் எண்ணம் இந்தியாவுக்கு இல்லை எனவும், தேர்தலை நடத்துவதா இல்லையா என்று தீர்மானிப்பது சிறிலங்கா அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் பதிலளித்துள்ளதாக கூறப்படுகிறது.