மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் முறைமை தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்குமிடையிலான விஷேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் அடுத்த வாரம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டதன்படி ஒன்பது மாகாணங்களுக்குமான தேர்தலை நடத்துவதாக இருந்தால் ஆட்சிக்காலம் நிறைவடையாமலுள்ள ஊவா மாகாண சபை கலைக்கப்படவேண்டும்.
அத்தோடு தேர்தல்கள் பழைய முறைமையில் நடத்தப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி தனது ஆலோசனையில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நிலையில், புதிய தேர்தல் முறைமையில் நாடாளுமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களது ஒத்துழைப்புடனும் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டிய தேவையுள்ளது.
இந்த இடர்நிலையில் ஒரு முடிவை எட்டும்முகமாக அடுத்த வாரம் கலந்துரையாடலொன்றுக்கு பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்” என சம்பிக்க ரணவக்க மேலும் தெரிவித்தார்.