மாகாணசபை முறையை ஒழிப்பதற்கு நாங்கள் இடம் கொடுக்கமாட்டோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
ஆனால் வெறுமனே இருக்கின்ற மாகாணசபை முறை எங்கள் பிரச்சினைக்கு தீர்வு என்றும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.
மாகாண சபை முறைமை இருக்க வேண்டும். அது முழு அதிகாரங்களை பெற்றதாக ஒரு சமஸ்டி கட்டமைப்பில் வடக்கு, கிழக்கு இணைந்த ஒரு ஆட்சியாக மலர வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்பார்ப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணம் ,அல்வாய் கிழக்கு, இலகடியில் உள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்ற புத்தாண்டு பொங்கல் நிகழ்வில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் இந்த புத்தாண்டிலாவது ஒரு விடிவு ஏற்பட வேண்டும் என்ற ஏக்கத்துடன் இருக்கிறார்கள்.அந்த இலக்கை அடையவேண்டுமென நாங்கள் பிரார்த்திக்கின்றோம். பிரார்த்திப்பது மட்டுமல்ல அதற்காக தொடர்ந்து எங்களது பிரயாசையையும் நாங்கள் கொடுத்துக் கொண்டேயிருப்போம்.
எங்களுடைய முயற்சி ஒருபோதும் கைவிடப்படமாட்டாது. ஆகையினாலே அனைத்து மக்களுக்கும் நாங்கள் வாழ்த்து சொல்லுகின்ற அதே வேளையில், விசேடமாக வடக்கு ,கிழக்கு தமிழ் மக்களுடைய அரசியல் விடுதலையை நாங்கள் வேண்டி அதற்காக உழைப்போம் என்று உறுதி கூறுகின்றோம்.
அரசாங்கத்துக்குள்ளே மாகாணசபைத் தேர்தல் நடத்துவது பற்றி பெரியதொரு இழுபறி நடந்து கொண்டிருக்கிறது என்று எங்களுக்கு தெரிகிறது. அரசாங்கம் மாகாண சபைகளையும் கைப்பற்ற வேண்டும் என்று சிந்திக்கிறார்கள்.
ஆனால் கடும்போக்குவாத பின்னணியை கொண்ட பலர் குறிப்பாக இந்த அரசாங்கத்தை கொண்டு வந்தவர்கள் விசேடமாக ஜனாதிபதியின் வெற்றிக்காக உழைத்த இனவாத சிந்தனை உள்ள கடும்போக்குவாதிகள் மாகாணசபை முறை அகற்றப்பட வேண்டும் என்று தங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்துவருகிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.