மாலைதீவில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிபர் தேர்தல் நடாத்தப்பட்டு தற்போது முடிவுகள் வெளியிடப்பட்டு வரும் நிலையில், 58.3 சதவிகித வாக்குகள் பெற்று எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது வெற்றி பெற்றுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்களில் தகவல் வெளியாகியுள்ளது.
மாலைதீவில் ஆட்சியாளரிடையே தொடரும் மோதல் போக்கின் மத்தியில், இன்று அங்கு அதிபர் தேர்தல் நடாத்தப்பட்டுள்ளது.
இதில் மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பில் யாமீன் அப்துல் கயூம் மீண்டும் போட்டியிட்ட நிலையில், அவரை எதிர்த்து மாலத்தீவு சனநாயக கட்சி சார்பில் இலங்கையில் வசித்து வருகிற முன்னாள் அதிபர் முகமது நஷீத் போட்டியிடுவதற்கு முயற்சிகளை மேற்கொண்டார்.
எனினும் பின்னர் அவர் போட்டியில் இருந்து விலகியதையடுத்து அவரது கட்சி சார்பில் இப்ராகிம் முகமது போட்டியிட்டார்.
இன்று காலை 8 மணிக்கு தேர்தல் வாக்குப்பதிவுகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றதுடன், 92 சதவிகித வாக்குகள் பதிவானதாகவும் பின்னர் அறிவிக்கப்பட்டது.
தற்போது வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், எதிர்க்கட்சி வேட்பாளர் இப்ராகிம் முகமது 58.3 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், தேர்தல் முடிவு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஒரு வார காலத்திற்கு பின்னரே அறிவிக்கப்படும் என்று அந்த நாட்டு தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஆனால் தேர்தல் ஆணையத்தின் இந்த கால அவகாசம் முறைகேடுகளுக்கு வழி வகுக்கும் என வெற்றி பெற்ற எதிர்கட்சி அச்சம் தெரிவித்துள்ளது.