ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் நிலைமாறு கால நீதிப் பொறிமுறையில், போரில் உயிரிழந்தவர்களை உறவினர்கள் நினைவு கூர்வதற்குத் தடை விதிக்க கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளமையை, இலங்கையின் நல்லாட்சி அரசு சார்பில் வெளியுறவு அமைச்சர் மங்களசமரவீர ஏற்றுக்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் விடுதலைக்காக இறுதி வரை போராடி வீரச்சாவை தழுவிக்கொண்ட மாவீரர்களை நினைவுகூரும் தகுதி ஒவ்வொரு தமிழர்களுக்கும் உண்டு என்றும், மாவீரர் நாளை கடைபிடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும் அனைத்துலக சமூகத்திடமும் கூட்டமைப்பு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
தங்களை தமிழ்த் தலைவர்களாகவோ அல்லது மேதைகளாவோ வெளிப்படுப்படுத்திக் கொள்ளவதற்காக மாவீரர் நாள் நிகழ்வுகளை தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முன்னெடுக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு வழங்கியுள்ள சத்தியத்தின் அடிப்படையிலும், மக்கள் தமக்கு தந்துள்ள ஆணையின் அடிப்படையிலும் தலைமைத்துவ வழிகாட்டலை செய்வது தமது பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மாவீரர்களை கௌரவப்படுத்தி, தமிழர்களின் போரட்ட வரலாற்றை எதிர்கால சந்ததிக்கு கையளித்து, எதிர்வரும் காலத்தில் நிகழ்வுகள் எவ்வாறு முன்னெடுக்க வேண்டும் என்பதற்காவும் கூட்டமைப்பு தனது பணியை செய்திருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.
சனாதிபதி மற்றும் பிரதமரிடம் மாவீரர் நாள் நிகழ்வுகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதனை கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், சக நாடாளுமன்ற உறுப்பினர்களும் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சனாதிபதியும் பிரதமரும் தமது கோரிக்கைக்கு பச்சை கொடி காட்டாது விட்டாலும், நடைபெற்ற நிகழ்வுகளுக்கு தடை விதிக்காது, அச்சுறுத்தல்களை ஏற்படுத்தாது இருந்தமையால், மாவீரர் துயிலும் இல்லங்களில் சுடர் ஏற்றி தமது பிள்ளைகளை உறவினர்கள் அஞ்சலிக்க முடிந்தது என்றும் அவர் விபரித்துள்ளார்.
இவ்வாறு அஞ்சலி செலுத்தப்பட்டதை சிங்கள கற்றறிந்தோர் சமூகம் மற்றும் சிங்கள நற்சிந்தனையாளர்கள் கூட வரவேற்று இருந்தனர் எனறும் குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், இனிவரும் காலங்களில் மாவீரர் துயிலும் இல்லங்கள் சீர் அமைக்கப்பட்டு அஞ்சலி செலுத்துவதற்கு நல்லாட்சி அரசு வழிவகை செய்யும் என்று கூட்டமைப்பு நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.