அரச பயங்கரவாதத்தின் காரணமாக, பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்த நிலையில், அவர்களை நினைவு கூரவேண்டிய தார்மீக பொறுப்பு தமிழ் மக்களுக்கு இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா வைரவபுளியங்குளம் நகரசபை சிறுவர் பூங்காவில் எதிர்வரும் 26 ஆம் நாள் சிறிலங்கா படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சி மற்றும் களியாட்ட நிகழ்வு தொடர்பாக கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த மாதத்தை தமிழ் மக்கள் உணர்வுபூர்வமாக கடைப்பிடித்து வருகின்ற நிலையில், இசை நிகழ்வுகள் மற்றும் களியாட்ட நிகழ்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவத்தில் இருந்து உயிரிழந்தவர்களுக்கு வெற்றிவிழா கொண்டாடுவதுடன் இராணுவ வீரர்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருவதுடன், அரசிற்கு எதிராக செயற்பட்ட ஜே.வி.பி போன்ற அமைப்பினர் தங்கள் உறுப்பினர்களை நினைவு கூர்ந்து வருகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான நிலையில் தமிழ் மக்கள் தங்களது விடிவிற்காக உயிரிழந்தவர்களையும் அரச பயங்கரவாதத்தால் பலியான தமது உறவுகளையும் நினைவுகூரத் தடை விதிப்பதும், அந்த நாட்களில் இசை நிகழ்வுகளை நடாத்துவதும் நல்லாட்சி எனப்படும் தமிழ் மக்களின் வாக்குகளால் வெற்றிபெற்ற அரசின் செயற்பாட்டுக்கு உகந்ததல்ல எனவும் அவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்ச போரில் வெற்றி பெற்றிருந்தாலும் தமிழ் மக்களின் மனங்களை வெற்றிகொள்ள முடியாத நிலை காணப்பட்டது எனவும், இதே நிலையையே தற்போதைய அரசாங்கமும் ஏற்படுத்த முனைகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் புனித மாதத்தில் அவர்கள் தங்கள் உறவுகளை நினைவு கூரும் நிலையில், இசை நிகழ்வுகள் நடாத்துவதை நிறுத்தி தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்றும் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.