மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு எதிர்வரும் இலையுதிர் காலத்தில் அமெரிக்க வரும்படி ரஷ்ய அதிபர் விளடிமிர் புட்டினுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் கடந்த திங்கள்கிழமை இரண்டு தலைவர்களும் முதல் முறையாக அதிகாரபூர்வமான உச்ச நிலைப் பேச்சுக்களை நடாத்தியுள்ள நிலையில், அடுத்து பேச்சுக்கான இந்த அழைப்பை அவர் விடுத்துள்ளார்.
பயங்கரவாதத்தை நிறுத்துவது, இஸ்ரேலுக்குப் பாதுகாப்பு, அணுஆயுதம் உள்ளிட்ட அந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்ட விடயங்களை செயல்படுத்துவதற்கு இரண்டாவது சந்திப்பை தாம் எதிர்நோக்கியிருப்பதாகவும் கீச்சகப் பதிவொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மக்களின் உண்மையான எதிரிகளைத் தவிர, போலிச் செய்தி வெளியிடும் பத்திரிகைகளைத் தவிர மற்றவர்களுக்கு திங்கட்கிழமை நடைபெற்ற மாநாடு பெரும் வெற்றி என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் ஹெல்சின்கியில் திங்கட்கிழமை நடைபெற்ற உச்சி மாநாடு சர்ச்சைகளால் பிரபலமடைந்துவிட்டாலும், மாநாட்டில் இரண்டு நாடுகளின் தலைவர்களும் பேசியது என்ன என்பது குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
இந்த நிலையில் தற்போது ரஷ்ய அதிபர் புட்டினுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பு விடுத்திருப்பது குறித்து கருத்துக் கூறிய அமெரிக்க செனட் அவையின் சனநாயகக் கட்சித் தலைவர் சக் ஷும்மர், ஹெல்சின்கியில் நடந்த அந்த இரண்டு மணி நேர சந்திப்பில் என்ன நடந்தது என்பதைப் பற்றி தாம் அறியும் முன்பாக டிரம்பும் புதினும், அமெரிக்காவிலோ, ரஷ்யாவிலோ, வேறெங்குமோ தனியாக சந்தித்துப் பேசக்கூடாது என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவின் தேசிய உளவுப் பிரிவு இயக்குநர் டான் கோட்சுக்கு இந்த அழைப்பு ஆச்சரியம் அளித்துள்ளதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள அவர்,இது சிறப்பான ஒன்றாக இருக்கப்போகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் டிரம்பும் புதினும் ஹெல்சின்கியில் தனியறையில் பேசிய போது அவர்களோடு அவர்களது மொழிபெயர்ப்பாளர்கள் மட்டுமே இருந்தனர் என்றும், அதனால் அங்கே என்ன பேசப்பட்டது என்று தமக்குத் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.