ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருக்கும் முக்கிய நகரான மோசூலை இன்னமும் மூன்று மாதங்களில் முழுமையாக மீளக்கைப்பற்ற முடியும் என்று ஈராக்கின் பிரதமர் ஹைதர் அல்-அபாடி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
தலைநகர் பாக்தாத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திபிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்த ஆண்டுக்குள் மோசூல் நகர் கைப்பற்றப்பட்டுவிடும் என்று ஈராக்கின் பிரதமர் தெரிவித்திருந்தார்.
ஆனால் பொது மக்கள் நகரைவிட்டு வெளியாகாது வீடுகளுக்குள்ளேயே தங்கிவிட்டதால் அவர்களைக் காப்பாற்றும் பொருட்டு நடவடிக்கைகள் தாமதமடைந்ததாக ஈராக்கிய இராணுவத்தரப்பு தற்போது தெரிவித்துள்ளது.
இருந்த போதிலும் அந்த நகரின் கால்பகுதி ஈராக்கியப் படைகளின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், ஐ.எஸ் அமைப்பினரிடம் உள்ள மோசூலின் எஞ்சிய இடங்களையும் மீளக் கைப்பற்றுவதற்கான ஈராக்கிய படைகளின் தாக்குதல்கள் தொடர்வதாகவும் அது தெரிவித்துள்ளது.
இதேவேளை மோசுல் நகரில் தங்களுக்கு உதவியாக இருந்த முக்கிய பாலம் ஒன்றை அமெரிக்க விமானங்கள் அழித்துவிட்டதாக ஐ.எஸ் அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது.