நாட்டில் நிலவி வரும் கொரோனா பரவல் நிலைவரம், தடுப்பூசி செலுத்தும் பணிகள், படுக்கை வசதிகள், ஒக்சிஜன் வசதியை ஏற்படுத்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி அவரச ஆலோசனைக் கூட்டமொன்றை நடத்தியிருந்தார்.
நாட்டில் கொரோனா தொற்று மிக அதிகமாக உள்ள மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், சத்தீஷ்கர், தமிழகம், கேரளா, கர்நாடகம், டெல்லி உள்ளிட்ட 11 மாநில முதலமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்களுடன் பிரதமர் மோடி காணொலி மூலம் ஆலோசனை மேற்கொண்டார்.
கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைகளின் போது மருத்துவமனைகளில் ஒக்சிஜன் பற்றாக்குறை காரணமாக ‘பாரிய அனர்த்தம்’ ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
அனைத்து ஒக்சிஜன் ஆலைகளையும் இராணுவம் மூலம் கையகப்படுத்த வேண்டும் என்றும் டெல்லிக்கு வரும் ஒக்ஸிஜன் டாங்கர்களின் சீரான இயக்கத்தை உறுதி செய்ய அனைத்து மாநிலங்களின் முதலமைச்சர்களையும் வழிநடத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.