யாழ்ப்பாணத்தில், சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய கொரோனா தொற்றாளரான மூதாட்டி ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார் என தகவல்கள் கூறுகின்றன.
பருத்தித்துறை – தும்பளையைச் சேர்ந்த 75 வயதுடைய மூதாட்டியே மரணமானவர் என்று கூறப்படுகிறது.
பருத்தித்துறையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேருக்கு கோப்பாய் கல்வியற் கல்லூரியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இவர்களில் ஒருவரான மூதாட்டி, தொற்று குணமடைந்த நிலையில், நிலையில் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இன்று காலை பொதுச் சுகாதார அதிகாரி ஒருவர் அவரது வீட்டிற்குச் சென்ற போது, மூதாட்டி சோர்வடைந்திருப்பதை அவதானித்து, நோயாளர் காவு வண்டி மூலம், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, யாழ்ப்பாணத்தில் நேற்று மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக, வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நேற்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தாதி ஒருவர், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதி ஒருவர், ஆசிரியை ஒருவரும் அடங்கியுள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.